அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ‘இந்தியில் போர்டு’?
அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு பெங்களூருவில் கன்னட மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெங்களூருவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘நம்ம மெட்ரோ’வில் இந்தியில் பெயர் எழுத கடும் ஆட்சேபம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது, இந்தி திணிப்பை வேண்டுமென்றே மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது என்று கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, அக்டோபர் 18-ந்தேதி கொச்சியில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் கீழ் வரும் நகர மேம்பாடு மற்றும் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புதுறை அமைச்சகமும், இந்திய ஆலோசனைக்குழுவும் ஆலோசனை நடத்தின.
இந்தி மொழிக்கான ஆணை
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் எதிரொலியாக கடந்த டிசம்பர் 9-ந்தேதி, அனைத்து மெட்ரோரெயில்நிலையங்களிலும் மாநில மொழி, ஆங்கிலம் தவிர்த்து இந்தி மொழியிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் இருக்கம் மெட்ரோரெயில்நிர்வாகத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டம்
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சமீபத்தில் நம்ம மெட்ரோரெயிலை தொடங்கியது. அங்கு தற்போது கன்னடம், ஆங்கிலம் தவிர்த்து இந்தியிலும் அறிவிப்பு பலகை வைக்க முயற்சிகள் நடப்பதற்கு எதிராகவே போராட்டம் தொடங்கி இருக்கிறது.
அதிகாரம் இல்லை
இது குறித்து கன்னட கரிககாரா கூட்டா அமைப்பின் உறுப்பினர் கணேஷ் சேட்டன் கூறுகையில், “ கர்நாடக அரசு மெட்ரோரெயில்நிலையத்தில் எந்த மொழியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனக் கூற மத்திய அரசின் குழுவுக்கு எந்த விதமான சட்ட அதிகாரமும் இல்லை. மெட்ரோ ரெயில் என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது, அதில் மத்திய அரசு தனது விதிமுறைகளை புகுத்த முடியாது. இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
தமிழகம், கேரளா
மத்திய அரசின் செயல் என்பது, இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் செயலாகும். இந்த உத்தரவு தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஏன் நிறைவேற்ற ஆர்வம் காட்டப்படுகிறது’’ எனத் கேள்வி எழுப்பினார்.
உள்துறை அமைச்சகமே பொறுப்பு
இந்நிலையில், மத்திய நகர மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரச்சனகுமாரிடம், இது குறித்து கேட்டதற்கு அவர் கூறுகையில், “ மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் அதிகாரப்பூர்வ மொழித்துறை ஆகியவற்றின் உத்தரவுப்படியே நாங்கள் செயல்படுகிறோம். இந்த துறைகள் தான் எந்த மொழிகளில் எந்தெந்த போர்டுகள் இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
நோட்டீஸ்
இதற்கிடையே மெட்ரோ நிலையத்தில் ஏன் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது என்று விளக்கம் கேட்டு மெட்ரோ ரெயில் கழகத்துக்க, கன்னட மேம்பாட்டு ஆணையம்நோட்டீஸ் அனுப்பி உள்ளது.