2024 தேர்தல்: பாஜக புதிய மாநிலத் தலைவர்கள் நியமனம்!
தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

மத்தியில் தொடர்ந்து இரண்டு முறை பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அதேசமயம், 2024 தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களையும் பாஜக வகுத்து வருகிறது. இதற்கான பணிகளை அக்கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. மண்டல வாரியாக பூத் கமிட்டிகளில் அதிக கவனத்தை பாஜக செலுத்தி வருகிறது. தேர்தலையொட்டி, மூத்த தலைவர்கள் கட்சி பணிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மேலும், மாநில அளவில் கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய பாஜக தலைவர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தெலங்கானா பாஜக தலைவராக கிஷண் ரெட்டியும், ஆந்திர பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியும், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாக்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பாஜகவில் இணைந்தார். மத்திய அரசின் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருந்ததற்கிடையே, இந்த நியமனங்களை பாஜக மேலிடம் செய்துள்ளது.
ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி!
பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் தொடர் ஆலோசனை, பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.
2024 மக்களவை தேர்தலையொட்டி, முக்கிய பதவிகளுக்கான உயர்மட்டத் தலைவர்கள் உள்பட பாஜகவின் அமைப்பு ரீதியில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் அக்கட்சிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.