மிகக்குறைந்த அதிர்வெண் புவியீர்ப்பு அலைகள் மூலம் பிரபஞ்சத்தின் இடைவிடாத ஓசையை வெளிப்படுத்துவதில் ஐஐடி ரூர்க்கி ஆய்வாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கியான யூஜிஎம்ஆர்டி உட்பட, உலகின் ஆறு உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சர்வதேச வானியலாளர்கள் குழுவினர், இயற்கையின் சிறந்த கடிகாரங்கள் மற்றும் பல்சர்களை (கண்ணுக்குப் புலனாகாமல் இயங்கும் விண்மீன்களை) கண்காணிப்பதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த முடிவுகள், மிகக்குறைந்த அதிர்வெண் ஈர்ப்பு அலைகளால் ஏற்படும், பிரபஞ்சத்தின் இடைவிடாத அதிர்வுகளுக்கு நம்பிக்கை தரும் சான்றுகளை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அலைகள் சூரியனை விட கோடி மடங்கு கனமான, அசைந்தாடும் மாபெரும் கருந்துளை இணைகளில் இருந்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புவியீர்ப்பு அலைக்கற்றையில் புதிய வானியற்பியல் நிறைந்த வழித்திறப்பில் இந்தக் குழுவின் முடிவுகள் ஒரு முக்கியமான மைல்கல். ஐஐடி ரூர்க்கியின் பேராசிரியர் ஆறுமுகம், அவரது மூத்த பிஎச்.டி மாணவர் ஜெய்கொம்ப சிங்க ஆகியோர் இதில் பங்களிப்பு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடக்கும்: சரத் பவார் அறிவிப்பு

ஆரம்பகால தொழில்முறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளங்கலை மாணவர்கள் உட்பட பல விஞ்ஞானிகளின் பல ஆண்டு முயற்சியின் காரணமாக இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை அடைவதில் ஐஐடி ரூர்க்கி தொடர்ந்து பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்ததற்கு இதன் இயற்பியல் பேராசிரியர் ஆறுமுகம் நன்றி தெரிவித்துள்ளார்.

“இது ஆரம்பகாலத் தொழில்முறை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உற்சாகமான நேரமாகும். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் குழு ஒத்துழைத்து, நமது பிரபஞ்சத்தின் ஓசையைக் கேட்க முயற்சிக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தற்போதைய முடிவுகள் எதிர்காலத்தில் நமக்கு வியப்பூட்டும் அறிவியலைத் திறக்கும்" என்று ஐஐடி ரூர்க்கியின் மூத்த பிஎச்டி மாணவர் ஜெய்கொம்ப சிங்க தெரிவித்துள்ளார்.

"இந்த முயற்சியில் ஐஐடி ரூர்க்கியின் பரம் கங்கா போன்ற அதிநவீன வசதிகள் பயன்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சாதனை, அறிவியல் இலக்குகளை அடைவதில் சர்வதேச ஒத்துழைப்புகளின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது. பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது" என்று ஐஐடி ரூர்க்கி இயக்குநர் பேராசிரியர் கே.கே பந்த் தெரிவித்துள்ளார்.