மனப்பாடம் செய்யாத மாணவர்களை “செருப்பால் அடித்து துவைத்த” ஆசிரியர்...
பாடத்தை மனப்பாடம் செய்துவாராத மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தான் அணிந்திருந்த செருப்பால், அடித்து, உதைத்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆட்தீகலா நகரில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியின் காப்பாளராகவும், ஆசிரியராகவும் பி. காந்தி என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், 10வகுப்பு மாணவர்களை தெலுங்கு மொழிப்பாடல் ஒன்றை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க கடந்த மாதம் 30-ந்தேதி ஆசிரியர் காந்தி கூறியிருந்தார். அதன்படி வெள்ளிக்கிழமை அவர் வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் அந்த தெலுங்கு மொழிப்பாடலை ஒப்புவிக்க மாணவர்களிடம் கூறினார். இதில் பல மாணவர்கள் பாடத்தை சரியாக படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாடத்தை படிக்காத மாணவர்களை தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, அடித்து, துவைத்துள்ளார். இதில் மாணவர்களின் முகம், கன்னம் வீங்கிவிட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோரிடத்தில் புகார் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் மாவட்ட கல்வி துறை அதிகாரியிடமும், மாவட்ட கலெக்டரிடமும் ஆசிரியரின் அத்துமீறிய செயல் குறித்து புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில், பழங்குடி நல்வாழ்வுத்துறை அதிகாரி, ஜல்லி சம்புடு பள்ளிக்கு சென்று மாணவர்களிடத்திலும், ஆசிரியர் காந்தியிடமும் விசாரணை நடத்தினார்.
அதிகாரி சம்புடுவின் அறிக்கை கலெக்டரிடம் அளிக்கப்பட்ட பின், அதன் அடிப்படையில் ஆசிரியர் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடத்தில் உறுதியளித்தனர்.