பிரதமர் மோடி பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுடன் செல்பி எடுப்போம் என பிராசராம் செய்து பெண் குழந்தைகளை பாதுகாத்து பேசி வருகிறார். 

ஆனால், உத்தரப்பிரதேசம், ஆக்ராவில், ஒரு பெண் 2-வது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்று எடுத்தார் என்பதற்காக கணவனே அந்த மனைவியின் தலையை மொட்டை அடித்து, அடித்து துன்புறுத்தி துரத்திய கொடுமை அரங்கேறி இருக்கிறது.

ஆக்ரா, மால்புரா பகுதியைச் சேர்ந்தவர் நன்னு.இவரின் கணவரின் ராசித். இவர்களுக்கு திருமணமாகி 7ஆண்டுகள் ஆகிறது. ராசித் டிரைவராக பணிசெய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

இந்த சூழலில் நன்னு, 2-வதாக பெண் குழந்தையை கடந்த வாரம் பெற்று எடுத்தார். 2-வதாகவும் பெண் குழந்தை பெற்றெடுத்த நன்னுவை அவளின் கணவர் ராசித் அடித்து துன்புறுத்தி, அவளின் தலை முடியை மழித்த மொட்டை அடித்துள்ளார். கணவரின் குடும்பத்தினரும் நன்னுவை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர்.

 ஒரு கட்டத்தில், பிறந்த 13 நாள் ஆன பச்சிளங்குழந்தையோடு நன்னுவை பெற்றோர் வீட்டுக்கு துரத்தினர். கண்ணீரும், கைக்குழந்தையோடும் வந்த நன்னுவைப் பார்த்த அவளின் பெற்றோர்கள் கலங்கிப்போனார்கள். இப்போது பெற்றோர் அரவணைப்பில் நன்னுவும், குழந்தையும் இருந்து வருகின்றனர். 

நன்னு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மால்புரா போலீசில் புகார செய்துள்ளார். இது குறித்து நன்னுவின், சகோதரர் மனைவி பிரவீண் பானு கூறுகையில், “ கடந்த 27ந்தேதி நன்னுவின் தலைமை மொட்டை அடித்து, அவளின் 13 நாள் குழந்தையை பிரித்து வீட்டை விட்டு கணவர் வீ்ட்டார் துரத்திவிட்டனர். 

தாய்பாலுக்காக அழுது கொண்டிருந்த பச்சிளங்குழந்தைக்கு பால்புகட்டக்கூட நன்னுவை அனுமதிக்கவில்லை. அழுகையுடன், வேதனையுடன் திங்கள்கிழமை தனது பெற்றோர்களை நன்னு சந்தித்து தனது நிலையை விளக்கினார். அதன்பின், நன்னுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது” என்றார். 

இது குறித்து மால்புரா போலீஸ்நிலைய ஆய்வாளர் உன்முக்த்சந்த் கூறுகையில், “ நன்னு இப்போது உடல்ரீதியாக பலவீனமாக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க கணவருக்கு உத்தரவிட்டுள்ளேன். நன்னு கணவரையும், அவரின்குடும்பத்தார் 5 பேரையும் அழைத்து கடுமையாக எச்சரித்து, அனுப்பினோம். நன்னுவையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு சேர்ந்துவாழ்வதாக ராசித் தெரிவித்துள்ளார். புகாரையும் நன்னு குடும்பத்தினர் வாபஸ் பெற்றுவிட்டனர்” எனத்தெரிவித்தார்