டில்லியில் நாள்தோறும் 5 ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால்தான் உயிர்வாழ முடியும்..! காற்று மாசு அதிகரிப்பால் எச்சரிக்கை..!
டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், இனி தினமும் 5 ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால் தான் உயிர் வாழும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காற்று மாசு
தலைநகர் டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று மாசு மோசமடைந்து வருகிறது. இதனால் டில்லியில் மூச்சுத்திணறல், ஒவ்வாமை, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட சுவாச கோளாறு பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
ஆயுட்காலம் குறையும்
வழக்கத்தை விட அதிகமாக மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு நோயாளிகள் அதிகரித்துள்ளனர். மாசடைந்த காற்றை சுவாசிப்பதாலேயே, உடலுக்குள் புகுந்து நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பத்து நாள் இந்த நச்சுக்காற்றை சுவாசித்தாலேயே ஒருவரது ஆயுட்காலம் சில வாரம் அல்லது மாதக்கணக்கில் குறைந்து விடும் நிலை அபாயம் உள்ளது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால்தான் பொதுமக்கள் வெளியே வந்தாலே, முகக்கவசம் அணிந்தபடியே வரும் நிலை உள்ளது.
இந்தநிலையில் தற்போது உலக சுகாதார கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
உயிருக்கு ஆபத்து
இந்தியா உள்பட உலகின் 92 சதவீத பகுதிகளில் காற்றின் தரம் என்பது மோசமாக உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் முன்கூட்டியே ஏற்படுகிற மரணங்களில் 88 சதவீத உயிரிழப்புக்கு காரணமே காற்று மாசு தான். இந்த நிலையில் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
5 சிலிண்டர்
இந்த நிலை நீடித்தால் மக்கள் வெளியே நடந்து சென்றாலே ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டுதான் செல்லும் நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனுக்கும் தினமும் 5 ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும். டில்லியில் தினமும் 10ஆயிரம் கடன் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதுவே காற்று மாசு அடைவதற்கு முக்கிய காரணம்.
நகரமயமாதல்
நகரமயமாதல் என்ற பெயரில் பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்படுவதால் ஏற்படுகிற மாசு மற்றும் வாகன பெருக்கத்தால் வெளியாகும் நச்சுப்புகையும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கான காரணங்கள்.
ஒருங்கிணைந்து
குளிர்காலத்தில் இதமான வெப்பத்துக்காக எரிக்கப்படுகிற டயர்கள், பழைய ஷூக்கள், பிளாஸ்டிக் கழிவுகளும் காற்றில் மாசு ஏற்படுத்துகின்றன.எனவே மாசு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சிகளுடன் மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மாசு என்ற பூனைக்கு மணி கட்டுகிற பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.