Home Minister Rajnath Singh said that security forces are killing 5 terrorists every day

நாள்தோறும் 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொன்று குவித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில், 3 நாட்களுக்கு ஒரு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பாதுகாப்பு துறையில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை என 3 வித படைப்பிரிவுகள் உள்ளன. இவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதேபோன்று ராணுவத்துக்கு உதவியாக எல்லை பாதுகாப்பு படையினர், ரிசர்வ் போலீசார், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை என்பது உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையை பாதுகாத்தல், காஷ்மீர் தீவிரவாதம், வடக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துதல், சுனாமி, நில நடுக்கம், வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படையினர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வருவதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் வீரர்களின் தற்கொலை குறித்த பாதுகாப்புத் துறையின் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த 2014 ஜனவரி 1-ந்தேதி முதல், கடந்த மார்ச் 31-ந்தேதி வரைக்குமான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதில், மொத்தம் 1,185 நாட்களில் 348 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த சம்பவங்கள் அனைத்தும் வீரர்கள் பணியில் இருக்கும்போது நடந்துள்ளன. நீண்ட காலமாக ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த வீரர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முப்படைகளில் தரைப்படையில் மட்டுமே தற்கொலைகள் அதிகம் நடந்துள்ளன.

தற்கொலை செய்து கொண்ட 348 பேரில், 80 சதவீதம் அதாவது 276 பேரை தரைப்படையை சேர்ந்தவர்கள். இதேபோன்று கடற்படையில் 12 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றுக்கு பணிச்சுமை காரணம் அல்ல என்றும், குடும்ப பிரச்சினைகள், நிலத் தகராறு போன்றவையே தற்கொலைக்கு காரணம் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எல்லையில் நீண்டநாட்களாக பணி புரிந்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக வீரர்களை நிறுத்தும்போது அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக பலவீனம் அடைகின்றனர்.

அவ்வப்போது பயிற்சி பெறுதல், நாட்டுக்காக பணிபுரிதல் போன்றவை சிறப்பாக செயல்பட வீரர்களுக்கு உதவுகின்றன. இருப்பினும், சில சமயங்களில் வீரர்கள் சிரமத்தை உணர்கிறார்கள் என்றார். மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், குடும்ப பிரச்சினையால் விடுமுறையில் சிலர் வீட்டுக்கு செல்கின்றனர். அவர்கள் மீண்டும் பணிக்கும் திரும்பும்போது முழு கவனத்துடன் பணியாற்ற முடிவதில்லை. இந்த பிரச்சினைகள் குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, வீரர்கள் பணி புரிவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தப்பட்டுள்ளது. மன அழுத்தத்தை போக்க பல அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.