பாஜக பிரமுகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மதம் மதவெறியை அனுமதிப்பதில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றப்பட்ட நகரங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றின் பெயர்களைத் திருத்தி அமைக்க வேண்டும் என பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமின்றி இந்தியாவிலேயே ஏழு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக ஆகிவிட்டனர் என்று அதில் கூறி இருந்தார்.

கே. எம். ஜோசப், பி. வி. நாகரத்னா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின் முடிவில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் இருவரும் கூறிய கருத்துகள் கவனிக்கத் தகுந்தவை.

Air India: விமானத்தில் வழங்கிய உணவில் பூச்சி! பயணியிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா!

நீதிபதி கே. எம். ஜோசப்:

"நம் நாடு மதச்சார்பற்றது என்ற முறையில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி கவலை கொள்கிறீர்கள். சென்றுபோன தலைமுறையினர் மூடிய இடத்தை தோண்டுகிறீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது ஒற்றுமையின்மை உண்டாக்கும். உங்கள் விரல் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சுட்டிக்காட்டி அதை கொடூரமானது என்று சொல்கிறது. இந்த நாடு எப்போதும் கொந்ததளிப்புடனேயே இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

வாழ்வியல் தத்துவத்தை அடிப்பையாகக் கொண்ட மிகச்சிறந்த மதம் இந்து மதம். அதனைச் சிறுமைபடுத்தாதீர்கள். எப்போதும் நம்மை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து மதத்தை சமமாகவே நேசிக்கிறேன். இந்து மதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். இந்து மதத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ள முயலுங்கள். இந்து மதத்தை உங்களுடைய குறிப்பிட்ட நோக்கத்துக்கு தகுந்தபடி பயன்படுத்தாதீர்கள். நான் கேரளாவைச் சேர்ந்தவன். அங்கு கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கு இந்துக்களே நிலத்தை கொடையாக அளித்துள்ளனர்." என்று நீதிபதி ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஆணழகன் போட்டி: பிரட் தொண்டையில் சிக்கி 21 வயது பாடிபில்டர் பலி

நீதிபதி பி. வி. நாகரத்னா:

"இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறையைக் குறிக்கிறது. அது மதவெறியை அனுமதிப்பதில்லை. நாட்டில் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. காலனி ஆதிக்க காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் கொள்கையை இங்கு கொண்டுவர வேண்டாம்" என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.

“ஒரு நாடு கடந்த காலத்தின் கைதியாக இருக்க முடியாது. இந்தியாவில் நடைபெறும் சட்டத்தின் ஆட்சி, மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புடன் இணைந்தது. 14வது சட்டப்பிரிவு மாநில நடவடிக்கைகளில் சமத்துவம் மற்றும் நேர்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எந்த நாட்டின் வரலாறும் அதன் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரை வேட்டையாட முடியாது." என்று கூறிய நீதிபதிகள், சகோதரத்துவம் மட்டுமே ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

"சகோதரத்துவம்தான் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பொன் எழுத்துகளால் பதிக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை" என்றும் நீதிபதிகள் கூறினர்.

Chennai Airport: தங்கமாக மின்னும் சென்னை விமான நிலையம்! பிரத்யேக புகைப்படங்கள்!