நெகிழ்ச்சி.. தொழுகை செய்ய நிலம் கொடுத்த இந்து சகோதரிகள்.. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்கள்..
உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்ராபூரில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தங்களின் சொந்த நிலத்தை, இந்து சகோதரிகள் மசூதிக்கு தானம் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்ராபூர் அருகே பெயில்ஜுடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் லாலா பிரிஜ்னந்தன் . இவர் அனைத்து மதமும் சமம் என்று கருதி, பிற மதத்தை சேர்ந்த மக்களுக்கும் நல்லெண்ண அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டில் லாலா பிரிஜ்னந்தன் பிரசாத் இறந்துவிட்டார்.
அந்த கிராமத்தில் உள்ள மசூதியை ஒட்டி, தொழுகை நடத்தும் மைதானம் 4 ஏக்கரில் உள்ளது. இங்கு ரம்ஜான் உட்பட ஈத் பண்டிகை காலத்தில் சுமார் 20,000 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவர். இந்த இடத்துக்கு அருகே, லாலா பிரிஜ்னந்தனுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த நிலத்தை , மசூதிக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்துள்ளது. இவர் தனது நிலத்தின் 20,424 சதுர அடி பகுதியை ஈத்காவுக்கு தானம் அளித்து, இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையேயான உறவை வலுப்படுத்த விரும்பியுள்ளார். ஆனால் தனது ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே, இவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது அவரது நிலத்தை அவரது மகன் மற்றும் மகள்கள் பிரித்துக் கொண்டதில், மசூதிக்கு கொடுக்க விரும்பிய அந்த பங்கு இரண்டு மகள்களுக்கு வந்துள்ளது. தற்போது, ஒரு மகள் உத்தரபிரதேசத்தின் மீரட் நகரிலும், இன்னொரு மகள் டெல்லியிலும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் நிலத்தை, தந்தையின் விருப்பப்படியே ஈத்காவுக்கு தானம் கொடுக்க முடிவு செய்து, காசிபூர் ஈத்கா கமிட்டியை தொடர்பு கொண்டு, சில நாட்களுக்கு முன் நிலத்தினை தொழுகைக்கு தானம் அளித்தனர்.
தந்தை இறந்து 19 ஆண்டுகளுக்குப்பின் அவரது ஆசையை, இரு மகள்களும் நிறைவேற்றியுள்ளனர். தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்களின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் இந்து - மூஸ்லின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்ய, ஈத்கா கமிட்டிக்கு நன்கொடை அளித்து வந்தார். அவர் அனைத்து மதங்களையும் மதிக்க கூடியவர் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் பல இடங்களில் மத மோதல்கள் நடந்துள்ள நேரத்தில், இந்த இந்து சகோதரிகள், ஈத்காவுக்கு தங்கள் நிலத்தை தானம் வழங்கி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.