மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி - இந்து சேனா அமைப்பு தொண்டர்கள் இருவர் கைது...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரியை தாக்க முயன்ற இந்து சேனா அமைப்பு தொண்டர்கள் இருவரை கட்சியினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை, இறைச்சிக்காக மாடு விற்கத் தடை உள்ளிட மக்கள் விரோத கொள்ைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. இதற்கு பா.ஜனதா கட்சி மட்டுமின்றி இந்து வலதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் முதல்தளத்தில் உள்ள மத்திய அரங்கில் நேற்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தலைமை அரசியல் குழுவின் 2-நாள் கூட்டம் குறித்து தீவிரமாக யெச்சூரி பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், யெய்சூரியை கண்டித்தும் ஆவேசமாக கோஷமிட்டனர். மேலும், பாரத் மாத்தா கி ஜே என்றும் குரல் கொடுத்தனர். இதைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த மந்திர் மார்க் பகுதி போலீசார் அந்த இரு நபர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெயர்உபேந்திர குமார், பவன் கவுல் என்பது தெரியவந்தது.
இது குறித்து டுவிட்டரில் சீத்தாராம் யெச்சூரி வௌியிட்ட பதிவில் “ சங்பரிவாரங்களின் குண்டர்களின் எந்த முயற்சிக்கும் நாங்கள் எந்தவித்திலும் பணிந்து செல்லமாட்டோம். அமைதியாகவும் இருக்க மாட்டோம். இது இந்தியாவின் ஆன்மாவுக்கான போர். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ எனத் தெரிவித்தார்.