ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்.. கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிய 7 மருத்துவ மாணவிகள்!
ஹிஜாப் அணிய மாணவிகளின் அனுமதி கோரிய கடிதம் தனக்கு வந்தது உண்மைதான் என்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோரிஸ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஏழு பேர் கொண்ட மாணவர்கள் குழு, தங்களை ஆபரேஷன் தியேட்டருக்குள் ஹிஜாப் அணிய அனுமதிக்காதது குறித்து கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்பு அணிந்துகொள்ளும் ஹிஜாப் மற்றும் நீண்ட கைக்கொண்ட ஜாக்கெட்களை முன்னதாகவே அணிந்துகொள்ள தங்களுக்கு அனுமதி வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளனர்.
மருத்துவம் பயிலும் 2020ம் ஆண்டு பேட்ச் மாணவர் ஒருவரால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் மேலும் 6 மாணவர்களின் கையொப்பம் இருப்பதாகவும், தங்களிடம் அந்த கடிதம் வந்துசேர்ந்திருப்பது உண்மை தான் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாணவிகள் எழுதிய அந்த கடிதத்தில், ஆபரேஷன் தியேட்டருக்குள் தங்களது தலையை மறைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தங்கள் மத வழக்கப்படி ஹிஜாப் அணிவது அவசியமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஹிஜாப் அணியும் பெண்கள், மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை அறையின் விதிமுறைகளுக்கு இணங்கும் அதே நேரத்தில், மதம் சார்ந்த உடைகளை அணிய முடியாமல் இவற்றுக்கு இடையே உள்ள சமநிலையைக் கண்டறிய கஷ்ப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : திமுக எம்.பி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்திடுக..!
மேலும் இந்தக் கடிதம் குறித்து பேசிய கல்லூரியின் முதல்வர் டாக்டர் மோரிஸ், இந்த கடிதம் தனக்கு வந்தது உண்மை தான் என்றும். அவர்கள் சொல்வது போன்ற உடைகளை அணிந்து அறுவை சிகிச்சை அறைக்குள் வருவது சற்று கடினமான ஒன்று என்றும் கூறியுள்ளார். குறிப்பாக அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு அவர்கள் உதவும் நேரத்தில் அவர்களது கைகளை கைமுட்டி வரை ஓடுகின்ற நீரில் கழுவ நேரிடும் என்று அதில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இவர்கள் அனுப்பியுள்ள இந்தக் கடிதம் குறித்தான முடிவை தன்னால் எடுக்க முடியாது என்றும், தொற்று தடுப்புப் பிரிவில் பல வருட அனுபவம் உள்ள மூத்த அதிகாரிகள், மற்றும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் குழு இதை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார். சிகிச்சைக்காக தங்களிடம் வரும் நோயாளிகளின் பாதுகாப்பே தங்களுக்கு பிரதானம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆகவே மாணவிகளின் கடிதத்திற்கு மூத்த அதிகாரிகள் என்ன முடிவு சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இதையும் படியுங்கள் : ஆண் பிள்ளைகள் எப்போ வயசுக்கு வருவாங்க?