ஆசிட் ஊற்றப்பட்ட சபரிமலை கொடிமரத்துக்கு பலத்த பாதுகாப்பு...!!! - சீரமைக்கபட்டு கேமரா மூலம் கண்காணிப்பு...
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கக் கொடிமரத்தின் மீது ஆசிட் ஊற்றி சேதப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்படடு, சீரமைக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் பாதுகாப்பை பல மடங்கு அதிகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொடிமரம் சேதம்
கோட்டயம் மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரூ.3.20 கோடி செலவில் புதிதாக தங்கத்திலான கொடிமரம் நேற்றுமுன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த கொடிமரம் பிரிதிஷ்ைட செய்யப்பட்ட சில மணிநேரத்தில் அதன் அடிப்பாகத்தில் நிறம் மாறத்தொடங்கியது.
5 பேர் கைது
இதையடுத்து, அதிகாரிகள் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில், 3 பேர் கொடிமரத்தின் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், பம்பை அடிவாரத்தில் 3 பேரையும், உதவிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
நவீன கண்காணிப்பு முறைகள்
இதையடுத்து, கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவஸம் போர்டு, கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து திருவாங்கூர் தேவஸம்போர்டின் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “ கோயிலில் புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதாவது கோயிலுக்கு வரும் பக்தர்களை கண்காணித்து, ஸ்கேன் செய்து அனுப்பும், அதேபோல பக்தர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் அடிவாரத்திலேயே சோதனை செய்யப்படும். சேதப்படுத்தப்பட்ட கொடிமரம் நேற்றுமுன்தினம் இரவை சரி செய்யப்பட்டது.
ஆந்திரா வழக்கமா?
அந்த கொடிமரத்தில் பாதரசம் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொடிமரத்தின் கீழ்பகுதியில் பாதரசத்தின் சொட்டுகளை விடுவது ஆந்திர மாநில வழக்கம் என்று கூறுகிறார்கள். அது குறித்து எங்களுக்கு தெரியாது.’’ என்றார்.
ஆலோசனை
இதற்கிடையே பத்தினம்திட்டா போலீஸ் ஐ.ஜி. மனோஜ் ஆபிரஹாம் நேற்று கோயிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விஷயங்கள்குறித்து ஆய்வு நடத்தினார். இந்த செயலுக்கு பின்னால் ஏதாவது பெரிய சதி இருக்கிறதா என்பது குறித்தும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.