ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகியை டிசம்பர் 14-ந் தேதி வரை மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) காவலில் வைக்க புதுடெல்லி நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைத்துனர்கள் சஞ்சீவ், வழக்கறிஞர் கவுதம் கைத்தான் ஆகிய இருவருக்கும் சி.பி.ஐ. காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் 14-ந் தேதி வரை காவலில் இருப்பார்கள்.

விமானப் படை முன்னாள் தளபதி தியாகி, அவருடைய உறவினர் சஞ்சீவ் அலியாஸ் ஜூலி தியாகி, வக்கீல் கௌதம் கைதான் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

நேற்று அவர்கள் 3 பேரும் டெல்லி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மிகப்பெரிய ஊழல் குறித்து இவர்களிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால், 10 நாட்கள் காவலில் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கோரியது. இதையடுத்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், 4 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டது.

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யக்கூடிய 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை ரூ.3,600 கோடிக்கு இந்தியா வாங்கியது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு ரூ.463 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை, 2014-ம் ஆண்டு பணப்பரிமாற்ற தடுப்பு சட்டப்படி, இந்திய விமானப்படை முன்னாள் தலைமை தளபதி தியாகி உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் டெல்லியை சேர்ந்த வர்த்தக பிரமுகர் கவுதம் கெய்தான் என்பவர் கைது செய்யப்பட்டு, கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே அமலாக்கத்துறை இயக்குனரகம் இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி தியாகிக்கு சம்மனும் அனுப்பியது.

இந்த ஒப்பந்தத்தை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பெறுவதற்காக, ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்தை 6 ஆயிரம் மீட்டரில் இருந்து 4 ஆயிரத்து 500 மீட்டராக விதி முறைகளில் குறைத்தார் என்பது தியாகி மீதான குற்றச்சாட்டாகும். ஊழல் குற்றச்சாட்டில் விமானப்படை முன்னாள் தலைமை தளபதி ஒருவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.