அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நண்பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கள், மயிலாப்பூர், மீனம்பாக்கம், நந்தனம், அசோக் நகர், பாரிமுனை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
