Har Ghar Jal: 11 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கிய ஹர் கர் ஜல் இயக்கம்: பிரதமர் மோடி பாராட்டு
கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஹர் கர் ஜல் இயக்கம் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் நோக்கில் ஹர் கர் ஜல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளின் எண்ணிக்கை 11 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ட்விட்டரில் பதிவிட்டார். “11 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள்! இது பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டம். ஜல் சக்தி அமைச்சகம் ஜல் ஜீவன் மிஷனுக்காக நிர்ணயித்த இலக்குகளை இடைவிடாமல் பின்பற்றுவதாலும், களப்பணிக் குழுவினரின் முயற்சியாலும் இந்த மாபெரும் மைல்கல்லை எட்டுவது சாத்தியமாக்கியுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரின் இந்தப் பதிவைப் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
“இது ஒரு பெரிய சாதனை. இது 'ஹர் கர் ஜல்' இயக்கம் எந்த அளவுக்கு பரவலாக செயல்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இம்முயற்சியின் மூலம் பயனடைந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் பணியை வெற்றி அடையச் செய்ய களப்பணியாற்றுபவர்களுக்கு பாராட்டுகள்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஹர் கர் ஹல் இயக்கம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்யணயிக்கப்பட்டுள்ளது.