குடிசைகள இடிச்ச மாநகராட்சி: கோபத்தில் பாஜக., கவுன்சிலரை கட்டி வைத்து நார்நாராக்கிய மக்கள்!
குஜராத் மாநிலம் வடோதரா மாநகராட்சியில், பாஜக., கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து அடித்து சட்டையை நாராநாராகக் கிழித்துள்ள சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடோதரா மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. அப்போது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடிசைகளும் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், வீடுகளை இழந்த மக்கள் பெரும் கோபம் கொண்டனர். அந்தக் கோபத்துடன், மாநகராட்சி முனிபல் கமிஷனரை போய்ப் பார்த்தனர். அப்போது அவர், ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது குறித்து முன்னமேயே நோட்டீஸ் அனுப்பப் பட்டது என்றும், நோட்டீஸ் கவுன்சிலருக்கும் அனுப்பப் பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த மக்கள், கவுன்சிலர் வீட்டுக்குச் சென்றனர். அவரிடம் கேட்டபோது, தனக்கு அப்படி எதுவும் நோட்டீஸ் வரவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த மக்கள், கவுன்சிலர் ஹஸ்முக் படேலை தரதரவென இழுத்துச் சென்றனர். அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து, சட்டையைக் கிழித்து, அடித்து உதைத்தனர். தங்கள் குடிசைகள் இடிக்கப்படப் போகின்றன என்ற தகவலை ஏன் அவர் தங்களுக்கு அனுப்பவில்லை என்று கூறி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர், போலீசார் வந்து கவுன்சிலரை மீட்டனர். இது குறித்து கவுன்சிலர் ஹஸ்முக் படேல் கூறியபோது 'இந்த நிலத்துக்கு சொந்தக்காரர் மாவட்ட ஆட்சியர். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு போடுகிறார். நான் ஒரு சிறிய வார்டின் சாதாரண கவுன்சிலர் தான். ஒரு நகரம் முழுவதும் எடுக்கப்படும் நடவடிக்கை எனக்கு எப்படி முன்கூட்டியே தெரியும். எல்லா இடத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறார்கள்' என்றார். இதனிடையே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.