நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் விழா..!!! - அழைப்பு விடுத்த அருண்ஜெட்லி...!
ஜி.எஸ்.டி வரி துவக்க விழா நாடாளுமன்றத்தில் ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு திட்டம் தீட்டியது.
இதற்கு ஏற்றவாறு ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல வித மறைமுக வரிகளை ஒன்றிணைத்து சீர்ப்படுத்தி ஒரே வரியாக செயல்முறைப்படுத்தும் நடவடிக்கையை பாஜக அரசின் நிதியமைச்சகம் எடுக்க ஆரம்பித்தது.
இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் கடந்த 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நான்காவது நாளாக நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனால் வரும் 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி சட்டம் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி துவக்க விழா குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி.எஸ்.டி வரி துவக்க விழா நாடாளுமன்றத்தில் ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், அனைத்து மாநில முதலமைச்சர்களும், நிதி அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.