இனிமே ரயில் வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்..!
ரயில் வரும் துல்லியமான நேரத்தை அறிய ஏதுவாக ரயில்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தவுடன் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு ரயில்வே அதிகாரி தகவல் அளிப்பார். பின்னர் பயணிகளுக்கு அறிவிக்கப்படும். ஆனால், ரயில் பழுது காரணமாக தாமதமானால், அதுதொடர்பான தகவல்கள் பயணிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை.
இந்த நிலையை சரிசெய்து, ரயில் வரும் துல்லியமான நேரத்தை பயணிகளுக்கு தெரிவிக்கும் விதமாக Real time Punctuality Monitoring and Analysis என்ற முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த முறையில், ரயில்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அதன்மூலம், ரயில்களின் துல்லியமான நேரத்தை அறிந்துகொள்ள முடியும். முதற்கட்டமாக சோதனை முறையில் டெல்லி-கவுரா மற்றும் டெல்லி-மும்பை ஆகிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் எனவும் பின்னர் நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் விரைவில் இந்தமுறை அமல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.