பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்புக் குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. முன்னாள் உளவுத்துறை (RAW) தலைவர் அலோக் ஜோஷி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவில் ஓய்வுபெற்ற உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு எடுத்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வளர்ந்துவரும் பாதுகாப்பு கவலைகளை பிரதிபலிக்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் புதிய தலைவராக முன்னாள் உளவுத்துறை (RAW) தலைவர் அலோக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட குழு ஏழு உறுப்பினர்களைக் கொண்டது. இப்போது ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய உறுப்பினர்கள்:

முன்னாள் மேற்கு மண்டல விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, முன்னாள் தெற்கு மண்டல ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மோன்டி கன்னா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் புதிய தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உள்ளனர்.

சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கதாகும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எல்லையில் பாதுகாப்புப் படை தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கைகள்:

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தூதரகங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், 1960ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது.

இதற்குடன், ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாபின் அட்டாரியில் இயங்கும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியும் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.