67 ஆயிரம் மத்தியஅரசு ஊழியர்கள் ‘களை எடுப்பு’?....பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி திட்டம்…
67 ஆயிரம் மத்தியஅரசு ஊழியர்கள் ‘களை எடுப்பு’?....பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி திட்டம்…
மத்திய அரசுப் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 67 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் பணியாற்றும் திறன் குறித்து ஆய்வு செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி வேலையில் மந்தமாக இருப்போர், சிந்தனைத் திறன் குறைந்தோர், புத்தாக்க தன்மை இல்லாமல் இருப்பவர்கள், சரியாக வேலை செய்யாதோர் ஆகியோருக்கு விருப்ப ஓய்வு கொடுக்க முடிவு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் நிர்வாகத்திறனை அதிகரிக்கவும், மக்களுக்கு சரியான, வேகமாக சேவை அளிக்கவும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய அரசில் உள்ள 67 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்களின் பணி எப்படி இருக்கிறது, ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அவர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் அவர்கள் சரியாக பின்பற்றவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இதில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் அதிகாரிகளின் பணித்திறனும், திறமையும் ஆய்வு செய்யப்பட உள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்தியஅரசு எடுத்துள்ள இந்த முடிவு உண்மையானதா என்பது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்கிடம் கேட்டபோது, “ தேசியஜனநாயகக் கூட்டணி அரசு ஊழலை ஒருபோது அனுமதிக்காது. அதேசமயம், நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த அரசு சமூகமான சூழலை உருவாக்கிக் கொடுக்கும். கடந்த ஒரு ஆண்டில் திறமையின்மையாக இருந்த, சரியாகப்பணியாற்றாத 129 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஆதலால், இந்த திட்டத்தின் நோக்கம், அதிகாரிகள், ஊழியர்கள் திறமையாக செயல்படுகிறார்கள், அடுத்தகட்ட பதவி உயர்வுக்கு தகுதியானவர்களா என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.