"Sabarimala" : சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேவசம் போர்டு அதிரடி..!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் இனி இணையதளம் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ’கூகுள் பே’ மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
"Sabarimala" : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் இணையதளம் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ’கூகுள் பே’ மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்தது. மேலும் கேரளாவில் கொட்டி தீர்த்த மழை காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்தது. தொடர் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழை குறையத் தொடங்கி இருக்கும் நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கூடுதலாக வரும் பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டு புதிய தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்த வகையில் ஏற்கனவே 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என அறிவித்து இருந்தது. தற்போது அடுத்த கட்டமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என அறிவித்துள்ளது. ஆனால் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அவசியம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் தரிசனத்திற்கான உடனடி முன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சன்னிதானத்தில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் அந்த பதிவினை காண்பித்து, பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம். பிரசாதத்திற்காக பணம் செலுத்த வரிசையில் காத்து நிற்கவேண்டியதில்லை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இதுதவிர சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் வழியாக சாமிக்கு காணிக்கை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக, சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் க்யூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் 94959 99919 என்ற எண் மூலம் கூகுள் பே வழியாக காணிக்கை செலுத்த முடியும். இதேபோல சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த க்யூஆர் கோடு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு செயல் அதிகாரி வி.கிருஷ்ண குமார் வாரியர் தெரிவித்துள்ளார்.
தேவசம்போர்டு அறிவித்துள்ளா சிறப்பு வசதிகள்,சலுகைகள் போன்றவற்றால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூட கேரள அரசிடம் , சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் மீதான கட்டுபாடுகளை குறைக்க வலியுறுத்தப்பட்டது.