கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள ‘Birch by Romeo Lane’ நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்கரைகளும், பார்ட்டி கலாச்சாரமும் உலகம் முழுவதும் பிரபலமான கோவா, இந்த வாரம் துயரத்தில் மூழ்கியுள்ளது. அர்போரா பகுதியில் சனிக்கிழமை இரவு இசை, விளக்குகள் நிறைந்த மகிழ்ச்சி சூழல் திடீரென பயம், அலறல், குழப்பமாக மாறியது. ‘Birch by Romeo Lane’ எனும் நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்து சில நிமிடங்களிலேயே 25 பேரின் உயிரை பறித்தது.

தீ ஆனது இரவு 1 மணிக்கு கிளப்பின் உள்ளே வேகமாகப் பரவியது என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த கிளப் கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா சீசனில் கூடுதல் கூட்டம் இருப்பது வழக்கம் என்பதால், விபத்தின் தாக்கம் பெரிதாக இருந்தது.

சம்பவத்தின் ஆரம்ப தகவளின்படி சமையலறை பகுதியில் சிலிண்டர் வெடித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது மட்டுமே காரணமா? அல்லது மின்சார கோளாறு, பாதுகாப்பு அலட்சியம், விதிமீறல் போன்றவை காரணமா என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலர் கூறியதுப்படி, தீ விபத்து ஏற்பட்டது சில நிமிடங்களில் முழு கிளப்பும் புகையால் நிரம்பி, வெளியேற வாய்ப்பு குறைந்துவிட்டது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். “அனுமதி நிபந்தனைகளை மீறி இயங்கும், கண்காணிக்காத நிர்வாகத்தினருக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கிளப்பின் உரிமையாளருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு மாஜிஸ்திரேட் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவா நைட் கிளப் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் 23 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இரண்டு கூடுதல் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இவற்றில் 4 பேர் சுற்றுலா பயணிகள், 14 பேர் ஊழியர்கள்; 7 பேரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் துயரத்தை வெளிப்படுத்தினர். மோடி, பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்தார் மற்றும் கோவா முதல்வரின் நிலைமையை கேட்டறிந்தார். அமித் ஷா, இது “மிகவும் வேதனையான சம்பவம்” எனக் கூறி, மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்தார்.