Bipin Rawat : 2015 ஹெலிகாப்டர் விபத்தில் தப்பியவர் பிபின் ராவத்… நாகலாந்த் பயங்கரத்தில் உயிர்தப்பினார்!!
கடந்த 2015 ஆம் ஆண்டு நாகலாந்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தற்போது மீண்டும் ஒரு விபத்தை சந்தித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நாகலாந்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தற்போது மீண்டும் ஒரு விபத்தை சந்தித்துள்ளார். நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஹெலிகாப்டரில் பயணித்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மீட்கப்பட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனிடையே பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படையும் உறுதிசெய்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சவுத்தரி விரைகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை அங்கு செல்லவுள்ளார். இத்தகைய விபத்தில் சிக்கிய பிபின் ராவத் ஏற்கனவே இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிர்தப்பியவர். கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று, நாகாலாந்தின் திமாபூரில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
என்ஜின் கோளாறு காரணமாக நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு கர்னல் உயிர்தப்பினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத்தும் இருந்துள்ளார். இருந்தபோதிலும் அவர் லேசான காயங்களுடம் உயிர் பிழைத்தார். அவர் அப்போது லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தார். இந்த நிலையில் இந்திய விமானப் படையின் சார்பில், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுக்குறித்து தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.