சோனியா காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும்: கபில் சிபல் போர்க்கொடி
சோனியா காந்தி குடும்பத்தில் உள்ள ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அனைவரும் காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சோனியா காந்தி குடும்பத்தில் உள்ள ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அனைவரும் காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தேர்தல் தோல்வி
உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பஞ்சாப்பில் ஆட்சியைப் பறிகொடுத்தது, உ.பியில் பிரியங்கா காந்தி 2019ம் ஆண்டிலிருந்து பிரச்சாரம் செய்தும் 2.40% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதிருப்தி
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் மோசமாகச் செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டதாக கட்சியின்மூத்த தலைவர்கள் தொடர்ந்து சோனியா காந்தியின் குடும்பத்தாரையும், தலைமையையும் விமர்சித்து வருகிறார்கள். கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த 2 ஆண்டுகளாகக் கூறியும் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தப்படுகிறது என்றும் விமர்சிக்கின்றனர்.
இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம்நபி ஆசாத், சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கொண்ட ஜி-23 குழுவினர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது கட்சிக்குள் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அறிவிப்பு வெளியானது ஆனால், இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.
காரியக் கமிட்டிக்கூட்டம்
கடந்த வாரம் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டத்தில் கூட தலைவர் பதவி பற்றிப் பேசப்பட்டநிலையில் பெரிதாக எந்த மாற்றமும் நடக்காமல், மீண்டும் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என முடிவெடுக்கப்பட்டது. ககாரியக் கமிட்டிக்கூட்டத்தில் குலாம் நபிஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் புதிய தலைவர் நியமனம் குறித்து ஏதும் பேசவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
கிடப்பில் அறிக்கை
கடந்த ஆண்டு மே மாதம் மேற்குவங்கம், கேரளாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி குறித்து அசோக் சவான் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கையை காங்கிரஸ் மேலிடத்திடம் அளித்தது. அந்த அறிக்கை மீது இதுவரை நடவடிக்கை சோனியா காந்தி எடுக்ககாதால் மூதத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், மூத்த தலைவர்கள் மணிஷ் திவாரி, ஜோதிமணி எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் தோல்விக்கான காரணங்கள், எவ்வாறு சரி செய்வது, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, சீர்திருத்தங்கள் என்ன என்பது குறித்து பரிந்துரை செய்தது.
அமைப்புரீதியாக சந்திக்கும் பிரச்சினைகள், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுளள நிதிப்பற்றாக்குறை ஆகியவற்றை தீர்த்தல், எதிர்காலத்தில் எவ்வாறு கூட்டணி அமைய வேண்டும், மற்ற கட்சிகளை எவ்வாறு அரவணைப்பது ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குழு தனது அறிக்கையை கடந்தஆண்டு ஜூலை மாதமே தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தது. ஆனால், அந்த அறிக்கை குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவி்ல்லை, அதுபற்றி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசிக்கவும் இல்லை என மூத்த தலைவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்
போர்க்கொடி
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இன்று அளித்த பேட்டியில் “ காங்கிரஸ் தலைமைப்பதவி பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, அவரின் குடும்பத்தினர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விலக வேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேர்தலில் மோசமாக தோல்வி அடைந்து வருகிறது.
காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உள்ளவர்கள் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர், காரியக்கமிட்டியை விட்டு சென்றவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஆதலால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்