திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானத்தின் அதிரடி திட்டம்..!
திருப்பதியில் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட இருக்கிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என ஏராளமாக உண்டியலில் செலுத்துகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மாதம்தோறும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் 5 வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இலவச தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான இலவச தரிசன சேவை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தரிசனம் கொடுக்கப்படவுள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேரும், மதியம் 2 மணிக்கு இரண்டாயிரம் நபர்களுக்கும், மாலை 4 மணியளவில் ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 4 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசன சேவையை பெறுகிறார்கள்.
நாளை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு சபதம் வழியாக இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை இந்த தரிசனம் வழங்கப்படவுள்ளது. தேவஸ்தானம் வழங்கும் இந்த சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.