"பிளாட் வாங்க பணம் தந்த வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி" - இழுத்தடிக்கும் பில்டர்ஸ்க்கு விரைவில் வருது ஆப்பு
வீடு வாங்குபவர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச்சட்டம் அமலாவது குறித்து மத்திய அரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்த சட்டத்தின்படி வீடு வாங்குவோர்களுக்கு குறித்த நேரத்தில் பில்டர்ஸ் வீட்டை கட்டி கொடுக்காவிட்டால் 12 சதவீதம் வட்டி அளிக்க வேண்டும்.
இந்த விதிமுறை முதன்முதலில் சண்டிகர், அந்தமான் நிகோர், டாமன் டையு, நாகர்ஹாவேலி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. டெல்லியில் ஒரு மாதத்துக்குப் பின் அமலாகும் எனத் தெரிகிறது.
உத்தரப் பிரேதசம், மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், பஞ்சாப், மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் விரைவில் இந்த சட்டம் அமலாகும் எனத் தெரிகிறது. உத்தரப் பிரேதசத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன் இந்த சட்டம் அமலாகலாம்.
இந்த சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வீடு வாங்குபவர்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். ஏனென்றால், பில்டர்ஸ்களிடம் முன்பணம் கொடுத்து, ஒப்பந்தம் செய்து, குறித்த நேரத்தில் புதிய வீட்டைப் பெறமுடியாமல் வீடுவாங்குபவர்கள் திண்டாடும் நிலை இனி வராது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதியின்படி, வீடுகட்டி வாங்குபவர்களிடம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஒட்டுமொத்த பணத்துக்கும் 12 சதவீத வட்டிபோட்டு, வீட்டை முடித்துக்கொடுக்கும் போது வாங்குபவர்களிடம் பில்டர்ஸ் தர வேண்டும்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பலமாநில அரசுகள் மக்களிடம் கருத்துக்களைக் கேட்க அனுப்பியுள்ளனர். அது தொடர்பான அறிக்கை வந்தவுடன் மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்தும் எனத் தெரிகிறது.