கடும் பனிப்பொழிவால் மக்கள் பாதிப்பு : டெல்லியில் ரயில் மற்றும் விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிக் காணப்படுகிறது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில், எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு நிலவும் பனிமூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நேரிடுகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் பனிமூட்டம் அதிக அளவில் இருப்பதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 69 ரயில்கள் தாமதமாக புறப்படும் என்றும், 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. 

இதேபோல், பனிமூட்டம் காரணமாக 9 பன்னாட்டு மற்றும் 3 உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளது. மேலும் 1 பன்னாட்டு விமானம் மற்றும் 2 உள்நாட்டு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் சாலைப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.