முதல்ல பேசுவோம்.. அப்புறம் செயல்படுத்துவம் - பெட்ரோலிய அமைச்சகத்தின் விளக்கம்..
நெடுவாசல் மக்கள் சந்தேகங்களை தீர்த்த பிறகே ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணியை தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத் துள்ளது. அந்த தனியார் நிறுவனம் இதற்கான ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் அந்த பகுதியே பாலைவனமாகி விடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசு உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து போராட்டடம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக முதல்கட்ட ஒப்பந்தம் நேற்ற கையெழுத்து ஆனது. இதனால் மீண்டும் நெடு வாசல் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு விளக்கத்தை இன்று மதியம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நெடுவாசல் பகுதியில் உள்ள மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அந்த சந்தேகங்களை தீர்த்து வைத்த பிறகே பணிகள் தொடங்கும்.
அதுவரை எந்த பணியும் தொடங்கப்பட மாட்டாது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தமிழக அரசு தீர்த்து வைக்கும். மக்கள் திருப்தி அடைந்த பிறகு இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.