முதல் ஓவர்... முதல் பந்து... முதல் விக்கெட்.... ஆரம்பத்திலேயே தடுமாறும் இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் இந்திய அணியின் ராகுல் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போடடி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. முன்னதாக மழை பெய்ததால், மைதானம் ஈரமாக இருந்தது. இதனால், இந்தியா - இலங்கி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி தாமதமாக தொடங்கியது. ஆடுகளம் மூடப்பட்டிருந்த நிலையில், புல் தரையில் இருந்த தண்ணீரை எந்திரம் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர். ஈரப்பதம் குறைந்த நிலையில் மதியம் சுமார் ஒரு மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மதியம் 1.30 மணியளவில் போட்டி துவங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் கே.எல்.ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல், முதல் ஓவரை வீசினார். இதனை ராகுல் எதிர் கொண்டார். முதல் ஓவரின் முதல் பந்தை ராகுல் தடுத்து ஆட முயன்றார். ஆனால், பந்து அவரது பேட்டில் உரசி சென்று விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்சானது. இதன் மூலம் இந்திய அணி முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது.
அவரைத் தொடர்ந்து புஜாரா - தவானுடன் ஜோடி சேர்ந்து இருவரும் நிதானமாக விளையாடினர். 7-வது ஓவரின் இரண்டாவது பந்தில், ஷிகர் தவான் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் 7-வது ஓவரில் 13 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. 8-வது ஓவர் முடிவில் இந்தியா 17 ரன்களுடன் விளையாடி வருகிறது. விராட்கோலி 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் புஜாரா 32 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.