சூரத் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ! மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவர்கள் !! 20 பேர் பலி !!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் திடீரென இன்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியிலிருந்த 1 ஆசிரியர் உள்பட 15 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டுள்ள 3 மற்றும் 4-வது மாடிகளில் சுமார் 10 மாணவர்கள் சிக்கியிருந்தனர். தீயிலிருந்து தப்பிக்க அந்த மாடிகளிலிருந்து அவர்கள் கீழே குதித்துள்ளனர். பலர் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டியூஷன் வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததாகவும், இந்தக் கட்டிடத்தில் தீ ஏற்பட்டால் பாதுகாப்பதற்கான எந்த வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. மாணவர்களின் வயது 14 முதல் 17 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.