திருப்பதி கோவிலில் பயங்கர தீ விபத்து..! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இங்கு சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் அருகே தனியாக லட்டு தயார் செய்யப்படும் இடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே லட்டு தயார் செய்யும் சமயலறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லட்டிற்கு பயன்படும் பூந்தி தயாராகும் பகுதியில் தான் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.