father carry daughter body in bike
அமரர் ஊர்தியோ ஆம்புலன்ஸோ தராததால் இறந்த மகளை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தந்தை ஒருவர் பைக்கில் தூக்கி சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா நகரில் உள்ளது சதார் மருத்துவமனை. இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த லலிதா குமாரி என்ற தனது மகளை அந்த மருத்துவமனையில் தந்தை மகாதேவ் ஷா என்பவர் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி லலிதா குமாரி உயிரிழந்தார்.
அவரது உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்தியோ ஆம்புலன்ஸோ வழங்கப்படவில்லை. அதனால் செய்வதறியாது திகைத்த தந்தை, வேறு வழியின்றி தனது இருசக்கர வாகனத்தில் மகளின் உடலை வைத்து கட்டியவாறு வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
இறந்த சிறுமியின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படாத நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. இறந்த மகளின் உடலை இரு சக்கர வாகனத்தில் தந்தை ஏற்றிச்சென்ற சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலிருந்து இறந்தவரின் உடலை மணியன் தீவு என்ற கிராமத்திற்கு 6 கிமீ உறவினர்கள் நடந்தே தூக்கி சென்ற சம்பவம் நடந்தது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கின்றனர்.
