அடுத்தடுத்து பாஜகவிற்கு பெரும் ஆதரவு... பிரபல நடிகை, கிரிக்கெட் வீரர் கட்சியில் இணைந்தனர்...!
நடிகர் யாஷ் தாஸ்குப்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
இந்தியா முழுவதும் பிரபலங்கள் மத்தியில் பாஜகவில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நிர்வாகம் மற்றும் செயல் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட திரைப்பிரபலங்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபல நடிகர், தயாரிப்பாளருமான ராம் குமார் தமிழக பாஜகவில் இணைந்தார். அப்போது பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என்றும், அவருடைய செயல்பாடுகளால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார். தற்போது பிரபல நடிகையும், கிரிக்கெட் வீரர் ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
வங்க மொழி படத்தில் பிரபல நடிகையான பாயல் சர்கார் என்பவர் நேற்று பாஜக தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். வங்காள மொழியில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பாயல் சர்கார், சிறந்த நடிகைக்கான விருதை பலமுறை பெற்றுள்ளார். அதேபோல் நடிகர் யாஷ் தாஸ்குப்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர். நேற்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, வங்காள நடிகர்கள் ராஜ் சக்கரவர்த்தி, காஞ்சன் மல்லிக், சயோனி கோஷ் ஆகியோர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது.