பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டருக்கு திடீர் தடை - ஜம்மு காஷ்மீரில் அதிரடி
தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மக்களை திசைதிருப்பும் வகையில் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டருக்கு ஜம்மு-காஷ்மீர் நேற்று திடீர் தடை விதித்துள்ளது.
இந்த தடை அடுத்த ஒரு மாதம் வரையிலும், அல்லது மறு உத்தரவு வரும் வரையிலும் நீடிக்கும் என்று மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன் கடந்த ஒரு மாதமாக இணையதளத்தையே ஒட்டுமொத்தமாக காஷ்மீர் அரசு தடை செய்து இருந்த நிலையில், இப்போது சமூக ஊடகங்களின் ஆப்ஸ்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையிலான போராட்டம் அடிக்கடி நடப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 350 வாட்ஸ் குழுக்கள் காஷ்மீரில் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றன என போலீசார் சமீபத்தில் கூறியிருந்தனர். அதைக் கண்டுபிடித்து தடுக்கும் முயற்சியில் இப்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக கடந்த 17-ந்தேதியில் இருந்து காஷ்மீரில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்,வீசாட், குயுகுயு, குயுஜோன், கூகுள் பிளஸ், ஸ்கைப், லைன்,பிஇன்ட்ரெஸ்ட், ஸ்நாப்சாட், யூடியூப், வைன் மற்றும் பிளிக்ஆர்ஆகிய ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வௌியிட்ட அறிவிப்பில், “ மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதியை நிலைநாட்ட, அனைத்து வகையான சமூக ஊடங்களும் நிறுத்தி வைக்க இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சமூக ஊடகங்கள் வாயிலாக எந்த விதமான செய்தியும், படங்கள் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரிமாறக்கூடாது. அடுத்த ஒரு மாதம் அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் ’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.