உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள  உணவு பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசின் நிதி ஆயோக் குழு பரிசீலித்துள்ளது. நாடு முழுவதும் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. 

உடல் பருமனால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதே இதற்கு மூல காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதனால் மக்கள் தொகையில், அதிகரித்து வரும் உடல் பருமனை சமாளிக்க நிதி ஆயோக் அமைப்பு சில திட்டங்களை முயற்சித்து வருகிறது. இதற்காக வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், நிதி ஆயோக் 2021-22க்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் 2019-20 யின் படி, பருமனான பெண்களின் சதவீதம் 2015-16ல் 20.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 18.4 சதவீதமாக இருந்த ஆண்களின் சதவீதம் தற்போது 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து குழந்தை பெறும் தாய்மார்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உடல் பருமன் ஏற்படுவது போன்றவற்றைத் தடுப்பது குறித்த தேசிய ஆலோசனைக் குழுவானது, ஜூன் 24, 2021 அன்று, சுகாதாரத்திற்கான நிதி ஆயோக் உறுப்பினர் தலைமையில், பல்வேறு ஆதாரங்களின்படி ஆலோசனை நடந்தது.

உணவுப் பொருள்களுக்கு வரி விதித்தால் பருமன் குறையும். அதன்படி, சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு அதிக வரி விதிக்கலாம். இதனால் மக்கள் தொகையில், உடல் பருமன் அதிகரித்து வருவதை சமாளிக்க முடியும். உணவுப் பொட்டலங்களின் முன் பகுதியிலேயே அதுகுறித்து லேபிள் ஒட்டப்படுவதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் பிராண்டட் அல்லாத நம்கீன்கள், புஜியாக்கள், காய்கறி சிப்ஸ் மற்றும் சிற்றுண்டி உணவுகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளன, பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது.கொழுப்புகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு வரிவிதிப்பு போன்ற மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.