”ஒரு போதும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது” - பாகிஸ்தானுக்கு சுஷ்மா பதிலடி...
மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க முடியாது எனவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தான் கருதப்படுவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி பாகிஸ்தான் மீது இந்தியா மறைமுகப் போரை தொடுத்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில் அதிகளவு செலவிடும் பாகிஸ்தான் மீது, பொய் புகார்கள் கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தங்கள் நாடு பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக இல்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உண்மைகளை மறைத்து பாகிஸ்தான் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்டவைகளை மறந்து பாகிஸ்தான் தலைவர்கள் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க முடியாது எனவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தான் கருதப்படுவதாகவும் சுவராஜ் தெரிவித்தார்.