நாடாளுமன்றம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையானோர் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று வாக்களித்தால் போதும், தேசியக் கொடியை மாற்றி விடலாம். 

இந்துக்கள் ஒன்றிணைந்தால் நாட்டின் தேசிய கொடியாக காவிக்கொடி மாறும் என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுள் ஒருவரான கல்லாட்கா பிரபாகர் பட் பேசியுள்ளார்.

இந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மங்களூருவில் விஷ்வ இந்து பரிஷித் சார்பில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், “என்றைக்காவது ஒரு நாள் காவிக்கொடி நம்முடைய தேசியக் கொடியாக மாறலாம். அதற்கு இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்துக்கள் ஒன்றிணைந்தால் இது நடக்கும், நடக்க வேண்டும். தற்போது தேசிய கொடியாக இருக்கும் மூவர்ணக் கொடிக்கு முந்தையக் கொடி எது? பிரிட்டிஷாரின் கொடி இங்கு இருந்தது. நம்முடைய நாட்டின் கொடியாக பச்சை வண்ண நட்சத்திரமும் சந்திரனும்தான் இருந்தது.

பள்ளிகளில் பகவத்கீதை

நாடாளுமன்றம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையானோர் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று வாக்களித்தால் போதும், தேசியக் கொடியை மாற்றி விடலாம். சிறுபான்மையினரை திருப்திப்படுத்த இறுதி செய்யப்பட்டதாக கூறும் தேசியக் கொடியை நான் மதிக்கிறேன். ஆனால், இதே போல வந்தே மாதரம் நிராகரிக்கப்பட்டப் பின்னரே தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டது. குஜராத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பகவத் கீதையைக் கற்பிக்கும் மாநில அரசின் முடிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பகவத்கீதை பள்ளிகளில் கற்பிற்கப்பட வேண்டும். குரான் மற்றும் பைபிள் போன்றவை வீடுகளில் கற்பிக்கப்பட வேண்டும்.

ஜிஹாப் விவகாரம்

தற்போது சர்ச்சையாகி உள்ள ஹிஜாப் பிரச்சினை என்பது ஜிகாத்தின் இன்னொரு வடிவமே. பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளால்தான் கிதாப்புக்குப் பதிலாக ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். விளையாட்டு வீராங்கனையான சனியா மிர்சா, எழுத்தாளர் சாரா அபூபக்கர் போன்றவர்கள் ஹிஜாப்புக்கு எதிராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய வலியுறுத்தப்படுவது விசித்திரமாக உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அண்மையில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தியிருப்பது வகுப்புவாத மோதலைத் தூண்டும் செயலாகும். இது தேசத் துரோகத்துக்கு சமம் ஆகும்” என்று கல்லாட்கா பிரபாகர் பட் பேசினார்.