ஜன.1ந்தேதியில் இருந்து மக்கள் பணியில் ‘எந்திரன் ரோபோ போலீஸ்'....எந்த நகரில் தெரியுமா?
தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ் ஈடுபடுத்தப்பட உள்ளது. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா சாதித்துள்ளது.
ஷங்கர் திரைப்படம்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் வெளிவந்தது. இதில் சிட்டி கதாபாத்திரம் ஒரு ரோபாவாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த ரோபோ, நல்ல விஷயங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதேபோல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ’ரோபோ போலீஸ்’ ஐதராபாத்தில் நாளை முதல் மக்கள் பணியில் ஈடுபட உள்ளது.
ரூ. 50 கோடி செலவு
ரூ. 50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘எச்-போட் ரோபாடிக்’ ரக போலீஸ் ரோபோ மிகவும் திறமை வாய்ந்த ரோபாவாக இந்தியாவிலேயே ஐதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ளதென இதனை உருவாக்கிய ரஞ்சன் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியின் சோதனைச் சாவடியில் தனது பணியைத் தொடங்க உள்ளது. இந்த ரோபோ, புகார்களை பெற்றுக்கொள்ளும், தன்னிடம் பேசுபவர்களை ஸ்கேன் செய்து நினைவில் வைத்துக்கொள்ளும்.
பிரான்ஸ் தயாரிப்பு
தன்னிடம் பேசுபவர்களுக்கு பதிலளிக்கும். மேலும், வெடிகுண்டைக் கண்டறிந்து அதனை நீக்கும் வல்லமையும் படைத்தது. இதற்கு முன், துபாயில் உலகிலேயே முதன் முறையாக ரோபோ போலீஸ், பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது, பிரான்ஸில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த ரோபோ ஸ்கேட்டிங் போல் காலில் சக்கரங்கள் அமைக்கப்பட்டது. இதனால் நடக்க இயலாது. ஆனால், ஹைதராபாத் ரோபோ, மனிதர்களை போல் நடக்கும் தன்மை கொண்டதாகும் என்பது குறிப்பிட தக்கது.