ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் தேர்தலின் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருவதால் அவரின் வெற்றி உறுதியானது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.
14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று காலை சுமார் 11 மணி முதல் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போது கடைசி கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.
இதில் ராம்நாத் கோவிந்த் 7,02, 644 வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்கட்சிகளின் மீராக்குமார் 3,35,330 வாக்குகளை பெற்றார்.
இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 14 ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.