தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிமீ ஆழத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு ஏற்பட்டது, இரண்டாவது நிலநடுக்கம் பிற்பகல் 2:51 மணிக்கு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (என்சிஆர்) பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா ஆகிய இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளும் அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலராலும் உணரப்பட்டுள்ளன. அதனை அவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து, பொதுமக்கள் உடனடியாக வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நீடித்த நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து டெல்லி போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். தயவுசெய்து உங்கள் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியே வாருங்கள். ஆனால், பீதி அடைய வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் அவசர உதவிக்கு, 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.” என பதிவிட்டுள்ளனர்.
நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
