காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பரபரப்புக்கும், இறுக்கமான சூழலுக்கும் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் ரசித்து ரசித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பரபரப்புக்கும், இறுக்கமான சூழலுக்கும் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் ரசித்து ரசித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தனகர் குறித்து மல்லிகார்ஜூன கார்கே புகழ்ந்து பேசியபோதும், பிரதமர் மோடி கர்நாடகத் தேர்தல் தொடர்பாக பயணம் குறித்து பேசியபோதுதான் இந்த சிரிப்பலை சம்பவம் நடந்தது.

மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “ மாநிலங்களவைத் தலைவர் தனகரை வழக்கறிஞராக இருக்கும்போதிருந்து எனக்குத் தெரியும். ஒருமுறை என்னிடம் தனகர் பேசிக்கொண்டிருந்தபோது, “நான் தொடக்கத்தில் வழக்கறிஞராக இருந்தபோது கட்டணமாகவரும் பணத்தை கைகளில் எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது அனுபவமான வழக்கறிஞராக மாறிவிட்டதால், இப்போது கட்டணமாக வரும் பணத்தை எண்ணுவதற்கு பணம் எண்ணும் எந்திரம் வாங்கிவிட்டேன்” என்றார்.

இதைக் கேட்டதும் மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது, பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் சிரித்தனர்.

இதைக் கேட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகர் பதில் அளிக்கையில் “ நான் இப்படிச் சொல்லவில்லை. என் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். இதைக் கேட்டு மீண்டும் அவை உறுப்பினர்கள் சிரித்தனர்.

மாநிலங்களவையில் மூத்த அரசியல் தலைவர்கள் நாகரீகமாக நகைச்சுவையாக கருத்துக்களைப் பகிர்ந்து சிரித்து மகிழ்ந்தது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்தியாவில் விரைவில் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தைக் கணித்த டச்சு ஆய்வாளர் சொல்வது என்ன?

தொடர்ந்து கார்கே பேசுகையில் “ தனகரின் கடின உழைப்பு வெற்றியைத் தந்துள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வந்தார்கள், பீஸ் செலுத்தினார்கள். உங்களுக்கு பணத்தை எண்ணுவதற்கு நேரம் இல்லாததால்தான் உதவியாளரிடம் கூறி பணம் எண்ணும் எந்திரம் வாங்கினீர்கள்” எனத் தெரிவித்தார்

இதைக் கேட்ட அவையில் இருந்த எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி சிரித்தனர். அப்போது பாஜக மாநிலங்களவைத் தலைவர் பியூஷ் கோயல் பேசுகையில் “ பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா வந்ததால்தான் பணம் எண்ணுவதில் இருந்த சிரமங்கள் குறைந்து எந்திரம் வந்தது” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் தலைவர் கார்கேவும், அவைத் தலைவர் தனகரும் மீண்டும் நகைச்சுவையாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். கார்கே பேசுகையில் “ பிரதமர் மோடி எப்போதுமே தேர்தல் வேகத்திலேயே இருக்கிறார். இப்போது என்னைக் குறிவைத்து, என்னுடைய சொந்த தொகுதியான கலாபுர்கிக்கு வந்துவிட்டார். நாடாளுமன்றம் நடந்தபோதுகூட, பிரதமர் மோடி என்னுடைய தொகுதிக்கு சென்றுள்ளார். ஒரு கூட்டம் அல்ல, 2 கூட்டம் நடத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் அவையில் சிரித்துவிட்டார். 

முஸ்லிம் பெண்கள் மசூதியில் தொழுகை நடத்தலாம்: உச்ச நீதிமன்றத்தில் ஏஐஎம்பிஎல்பி பிரமாணப்பத்திரம் தாக்கல்

இருப்பினும், அதானி மீதான மோசடி குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதை கார்கே கைவிடாமல் வலியுறத்தினார்.

அப்போது பியூஷ் கோயல் பேசுகையி்ல் “ தனிநபர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தான் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை. மல்லிகார்ஜூன கார்கே, தற்போது லூயிஸ் விட்டான் நிறுவன ஸ்கார்ப் அணிந்துள்ளார். எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது, யார் பணம் செலுத்தியது, விலை என்ன, என்றெல்லாம் கேட்க முடியுமா, இது கூட்டுக்குழு பணி அல்ல” எனத் தெரிவித்தார்