கப்பலேறி தப்பி வந்த துபாய் இளவரசி! மீண்டும் தந்தையிடமே ஒப்படைத்த இந்திய கடலோர காவல் படை!
நண்பருடன் இந்தியா வந்த துபாய் இளவரசி சேகா லத்தீபாவை இந்திய கடலோர காவல் படை மீட்டு, ஐக்கிய அரபு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாராசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரசீது அல் மக்தூம். இவரது மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா. 33 வயதாகும் இவருக்கு குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கையைக் கட்டிக் கொண்டு வானில் பறத்தல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஆர்வமுண்டு.
தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாத சேகா லத்தீபா, தனது நண்பருடன், கடல் வழியாக இந்தியா வந்துள்ளார். கடந்த 4 ஆம் தேதி அமெரிக்க, பிரெஞ்ச் குடியுரிமையுள்ள தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் நோஸ்ட்ரோமோ என்கிற படகில் கடல் வழியாக இந்தியா வந்துள்ளார்.
சேகா லத்தீபா, இந்தியா தப்பி வந்துள்ளது குறித்து இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர், சேகா வந்த படகை, கோவா அருகே மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர், சேகா லத்தீபாவையும், அவரது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.