காருக்குள் நூதன முறையில் கடத்தல்... ரூ.11.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்..!
அப்போது ரகசிய அறை அமைத்து ஒரு கிலோ எடையுள்ள 25 தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் காருக்குள் அவர்கள் நினைத்தபடி முதலில் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் சந்தேகம் முழுமையாக தீராததால் காரின் டிரைவர் சீட்டிற்கு முன்புறம் இருக்கும் இடங்களை சோதனையிட்டனர்.
அப்போது ரகசிய அறை அமைத்து ஒரு கிலோ எடையுள்ள 25 தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத்திற்கு ரூ.11.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் பயணித்த 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் கடத்தல் பொருள் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்த வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் “காரின் டேஷ்போர்டில் சமர்த்தியமாக ரகசிய அறை அமைத்து. அதில் பார்க்கும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் முறையாக பசையைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இருப்பினும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த ரகசியை அறையும் கண்டறிந்து தங்கத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு குறியீடு பதிக்கப்பட்ட தங்கம் கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத்திற்கு கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளனர்.