கேரளா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி பல கிராமங்கள் நிலைகுலைந்துள்ள சூழலில் இயற்கை சீற்றத்தை அறிந்த வளர்ப்பு கிளிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து பல குடும்பங்களை காப்பாற்றி உள்ளன.

கேரளா மாநிலத்தில் கடந்த 29ம் தேதி ஏற்பட்ட அதீத கனமழையின் விளைவாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பல கிராமங்கள் நிலச்சரிவால் உருக்குலைந்துள்ளன. பல கிராமங்கள் இருந்த தடமே தெரியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளன. விபத்து ஏற்பட்டு 6 நாட்களைக் கடந்தும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 380க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

“கிடைத்தது கை மட்டும் தான்” உடல் கிடைக்காததால் பெற்ற மகளின் கைக்கு இறுதிச்சடங்கு - கேரளாவில் தொடரும் சோகம்

இந்நிலையில் நிலச்சரிவை முன்கூட்டியே கணித்த வளர்ப்பு கிளிகள் அதன் உரிமையாளர் உட்பட பல குடும்பங்களை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவமும் அரங்கேறி உள்ளது. அதன்படி, முண்டக்கையின் காலனி சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வினோத் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் தங்களது வளர்ப்பு கிளிகளையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். புதிய வீட்டிற்குச் சென்ற கின்கினி கிளிகள் முதல் நாள் எவ்வித சலசலப்பும் இன்றி சாதாரணமாக இருந்துள்ளன.

ஆனால் நிலச்சரிவு ஏற்படும் தினத்தில் கின்கினி கிளிகள் வழக்கத்திற்கு மாறாக கூண்டிற்குள் ஆக்ரோஷமாக பறந்து கொண்டு அங்கும், இங்குமாக தாவிக் கொண்டு இருந்துள்ளன. இதனால் அசம்பாவிதத்தை முன்கூட்டியே உணர்ந்த கிளியின் உரிமையாளர் வினோத் தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் சென்று பார்த்தபோது வழக்கத்திற்கு மாறாக வெள்ளம் சென்று கொண்டு இருந்தது. அண்டை வீட்டார் அனைவரும் உறக்கத்தில் இருந்த நிலையில் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இயற்கை சீற்றம் குறித்து எச்சரித்துள்ளார்.

முதல்வரின் வருகைக்காக காவலர் செய்த செயல்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - சென்னையில் பரபரப்பு

இதனால் சுதாரித்துக் கொண்ட அண்டை வீட்டார், உறவினர்கள் பலர் வெள்ளம், காட்டாற்று வெள்ளமாக மாறுவதற்கு முன்பே வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். பின்னர் மறு நாள் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. கிளிகளால் உயிர் பிழைத்த பலரும் தற்போது இந்த தகவலை வெளியிட்டு தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.