இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ராகுல் எதிர்பார்க்கிறாரா? ரவி சங்கர் பிரசாத் கேள்வி!
மணிப்பூரில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறாரா என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்
ஆயுதப்படைகளை அனுமதித்தால் இரண்டு நாட்களுக்குள் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என ராகுல் காந்தி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இந்தியர்கள் மீது ஆயுதப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறாரா என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
1966 ஆம் ஆண்டு மிசோரமில் வெடிகுண்டுகளை வீசுமாறு விமானப்படைக்கு உத்தரவிட்ட தனது பாட்டியும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி செய்ததை செய்ய வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பதற்றம் நிலவும் மணிப்பூரில் இந்தியர்கள் மீது ஆயுதப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி எதிர்பார்க்கிறாரா? அல்லது அங்கு நல்லிணக்கத்தைப் பரப்பி மக்களை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா? எனவும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் இரு குழுக்களிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அவர்களை தூண்டும் விதமாக ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில சர்ச்சைக்குரிய குறிப்புகள் நீக்கப்பட்டாலும், ஆளும் பாஜகவின் அரசியலால் மணிப்பூரில் பாரத் மாதா கொலை செய்யப்பட்டதாக ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு நாடு பற்றியோ, அதன் அரசியல் பற்றியோ புரியவில்லை. இதுபோன்ற வெட்கக்கேடான மற்றும் பொறுப்பற்ற வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்த வேண்டாம் என ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டார்.
தோடர் பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி உற்சாக நடனம்!
1984 வகுப்புவாத வன்முறையில் சீக்கியர்களின் கொலைகள், 1983 இல் அசாமில் நடந்த படுகொலைகளை ராகுல் காந்தி எப்படி விவரிப்பார் என்று கேள்வி எழுப்பிய ரவிசங்கர் பிரசாத், நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான் என குற்றம் சாட்டினார்.
முன்னதாக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது பதிலுரையாற்றிய பிரதமர் மோடி, 1966 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி, மிசோரமில் ஆதரவற்ற குடிமக்கள் மீது காங்கிரஸ் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார். ஆனால், ஆயுதமேந்திய தீவிரவாத குழுக்களை குறிவைக்கவே விமானப்படை பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. ஆபரேஷன் ஜெரிகோவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிரிவினைவாத அமைப்பான மிசோ தேசிய முன்னணிக்கு எதிராக விமானப்படையை இந்திரா காந்தி பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.