மல்லையாவுக்கு எதிராக 2 ஆயிரம் பக்கம் ஆவணங்கள் - லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்...!!!
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 2 ஆயிரம் பக்க ஆவணங்கள் இந்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
தொழிலதிபர் விஜய் மல்லையாக தனது கிங்பிஷர் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். அதை திருப்பிச் செலுத்தாமல்லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
இவர் மீது பல்வேறு செக் மோசடி வழக்குகள், அன்னியச் செலாவணி மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகிய வழக்குகளில் ஜாமானில் வௌிவர முடியாத பிடிவாரண்ட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட்முடக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றத்தால் மல்லையா அறிவிக்கப்பட்டார்.
மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இங்கிலாந்து அரசிடம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு சார்பில அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, கடந்த ஏப்ரல்மாதம் 18-ந் தேதி மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்து லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அடுத்த 3 மணி நேரத்தில் ஜாமீனில் மல்லையா வௌியே வந்தார். அவருக்கு டிசம்பர் 4-ந் தேதி வரை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மல்லையாவுக்கு எதிராக வழக்கு நேற்று வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் இந்திய அரசு சார்பில் கிரவுன் வழக்காடு சேவை (சி.பி.எஸ்.) என்ற அமைப்பினர் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர். இதில் இந்திய அரசு சார்பில், மல்லையாவுக்கு எதிராக 2 ஆயிரம் பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகையில், “ மல்லையாவுக்கு எதிராக அனைத்து சாட்சியங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றை இந்திய அரசு சார்பில் தாக்கல் செய்துள்ளோம். இந்தியா சார்பில் ஆஜராகிய சி.பி.எஸ். அமைப்பு இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.மல்லையாவை இந்தியா கொண்டு வர இந்த ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ எத் தெரிவித்தனர்.
இதற்கிடையே நீதிமன்றத்துக்கு வந்த விஜய் மல்லையா நிருபர்களிடம் பேசுகையில், “ என் வழக்கறிஞர் ஆலோசனை அடிப்படையில் நான் அனைத்தும் செய்கிறேன். இது நீதிமன்றம். இந்தியா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யட்டும், நானும் வழக்கை சந்திக்கிறேன்’’ என்றார்.
ஏன் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றீர்கள் என்று நிருபர்கள் மல்லையாவிடம் கேட்டபோது, அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ நான் கடந்த 1992ம் ஆண்டில் இருந்தே இங்கிலாந்தில் தான் வசிக்கிறேன்’’ என்றார்.