"தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை கூட செய்வோம்" - பகீர் கிளப்பும் மத்திய அரசு
தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில், 5 வயதுக்கு மேற்பட்டோரில், 80 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொருவரின் கண் கருவிழி, உள்ளங்கை மற்றும் கட்டை விரல் ரேகைகளை பதிவு செய்து, அதன் அடிப்படையில், பிரத்யேக அடையாள எண் தரப்பட்டுள்ளது.
அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆதார் எண் அவசியம் என்ற நோக்கில் வாதங்களை முன்வைத்தார்.
மேலும், ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் இல்லை எனவும், மரபணு பரிசோதனை செய்தால் கூட தவறில்லை எனவும் தெரிவித்தார்.
ஆதாருக்கு எதிரான மனுக்கள் அதிக அர்த்தமுடையவை அல்ல. சமுதாயத்தை ஒழுங்கு படுத்த ஆதார் போன்றவை அவசியம். தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் ஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது என்பதாலையே கட்டயபடுத்துகிறது. போலி பான் அட்டை மூலம் பல கோடி இழப்பு ஏற்பட்டது எனவும் வாதிட்டார்.