அரசு அங்கன்வாடியில் மகனை சேர்த்த மாவட்ட ஆட்சியர் !! குவியும் பாராட்டுகள்!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பணி புரியும் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது 2 வயது மகனை தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல் அரசு அங்கன்வாடியில் சேர்த்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்ட ஆட்சியராக ஸ்வாதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர், நிதின் பதோரியா, அல்மோரா மாவட்ட கலெக்டராக உள்ளார்.இவர்களது மகன் அப்யுத். 2 வயதான மகனை கலெக்டர் ஸ்வாதி கோபேஷ்வர் நகரில் உள்ள, அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்வாதி, அங்கன்வாடி மையத்தில், அனைத்து வசதிகளும் உள்ளன. மற்ற குழந்தைகளுடன் பேசி, பழகி, ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, . எதிர்காலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி, அனைவருடன் எளிதாக பழகுவதற்கு, இது உதவும் என்றும் ஸ்வாதி குறிப்பிட்டார்.. அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம், அரசு அங்கன்வாடி மையத்தை பற்றிய மக்களின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஸ்வாதி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரே தனது குழந்தையை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்திருப்பது. அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிள்ளது. அவரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.