15 நாளில்… 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குநர்கள் தகுதி நீக்கம்! மத்திய அரசு அதிரடி...
ஆண்டு நிதி நிலை அறிக்கையையும், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கான ரிட்டன்களையும் தாக்கல் செய்யாத 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குநர்களை 15 நாட்களில் தகுதி நீக்கம் செய்து மத்திய கார்ப்பரேட் அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த 2 லட்சம் பேரும், 2013ம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட போலி நிறுவனங்களின் இயக்குநர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய கார்ப்பரேட் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “ 3 லட்சத்து 19 ஆயிரத்து 637 இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 17 ஆயிரத்து 239 நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் தற்போது வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் 5 வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இன்னும் 30 வங்கிகளிடம் இருந்து விவரங்கள் வரவேண்டியுள்ளது. அவை வரும் போது, நிறுவனங்கள், இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யும் எண்ணிக்கை அதிகரிக்கும். வங்கிகளிடம் இருந்து நாங்கள் பெறும் விவரங்களைப் பார்க்கும் போது எங்களுக்கே வியப்பாக இருக்கிறது. ஒரு போலி நிறுவனத்துக்கு 2 ஆயிரத்து 100 வங்கிக்கணக்கு இருக்கிறது.
50 நிறுவனங்களுக்கு வெவ்வேறான பெயரில் 450, 600, 900 முதல் 2,100 வங்கிக்கணக்குகள் வரை இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் சிக்கியுள்ளன. இந்த நிறுவனங்களையும், இயக்குநர்களையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் இந்திய வங்ககள் கூட்டமைப்புக்கு கடந்த மாதம் 8-ந்ேததி கடிதம் எழுதி போலி நிறுவனங்கள் வைத்துள்ள வங்கிக்கணக்குகள் குறித்த பட்டியலைக் கேட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் “ நாங்கள் எங்களுக்கு தேவையான விவரங்களைக் கேட்டு வங்கிக்கு கடிதம் எழுதிவிட்டோம். ரூபாய் நோட்டு தடைக்கு பின் செய்யப்பட்ட டெபாசிட்கள், அதற்குமுன் செய்யப்பட்ட டெபாசிட்கள், பணம் எடுக்கப்பட்ட விவரங்களைக் கேட்டு இருக்கிறோம். இதன்மூலம் போலி நிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வோம். கடந்த மாதம் 12ந்தேதி ஒரு லட்சம் நிறுவன இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.