போர்ப் பதற்றம் தணியுமா? - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சீனாவுடன் முக்கிய பேச்சு!!
பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற உள்ள நிலையில், பீஜிங் சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன நாட்டின் சக அதிகாரி ஆகியோர் சந்தித்து சிக்கிம் எல்லை பிரச்சனை குறித்து விவாதித்ததனர்.
பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு பீஜிங் சென்றுள்ளது. சிக்கிம் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டின் நடுவே அஜித் தோவல் சீன பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயச்சி தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்திய நாடுகளின் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பல்வேறு விவகாரங்களில் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை விளக்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியுள்ளன.